Menu


தமிழில் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்குக் கீழ்க்காணும் பல தலைப்புகளில் குழுக்கள் நியமிக்கப்பட்டன:
நிர்வாகக் குழுக்கள் 5, உறுப்பினர்கள் 74
பொருட்பட்டி அமைப்புக் குழுக்கள் 21, உறுப்பினர்கள் 132
ஆய்வுக்குழுக்கள் 27, உறுப்பினர்கள் 66
கலைச்சொற் குழு 1, உறுப்பினர்கள் 40
முதல் தொகுப்பு, அதன் பணி தொடங்கி 6 ஆண்டுகட்குப் பின் 1954 -இல், 742 பக்கங்களுடன் வெளிவந்தது. இதற்கு 207 அறிஞர்கள், அவரவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளனர். பணி தொய்வின்றித் தொடர்ந்து நடந்தது.1968-இல் 10ஆம் தொகுதி (இணைப்புத் தொகுதி) வெளியாயிற்று. இவற்றுள் 5ஆவது தொகுதியை அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது கலைக்களஞ்சிய ஆக்கப் பணிக்குப் பெருமை சேர்ப்பதாகும் .
இந்திய மொழிகளில் 10 தொகுதிகளைக் கொண்ட விரிவான கலைக்களஞ்சியம் தமிழில்தான் முதன் முதலாக வந்தது என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும். இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஓர் ஒப்பு உயர்வற்ற ஆக்கப்பூர்வமான தமிழ்த் தொண்டாகக் கருதலாம். இவற்றிற்கு 2240 அறிஞர்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். இது உண்மையிலேயே ஓர் ஒப்பும் உயர்வுமற்ற தமிழ்ப் பணியாகும்.
1954-முதல் தொகுதி
1955-இரண்டாம் தொகுதி
1956-மூன்று, நான்காம் தொகுதிகள்
1958-ஐந்தாம் தொகுதி
1959-ஆறாம் தொகுதி
1960-ஏழாம் தொகுதி
1961-எட்டாம் தொகுதி
1963-ஒன்பதாம் தொகுதி
1968-பத்தாம் தொகுதி
(இணைப்புத் தொகுதி)
“கலைக்களஞ்சியம் என்னும் பொருள் பொதிந்த சொல்லைத் தமிழகத்திற்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கே உரியதாகும். இப்பொழுது “Encyclopaedia” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான புத்தாக்கச் சொல்லாகத் தமிழறிஞர் அனைவராலும் “கலைக்களஞ்சியம்” என்னும் சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல் தமிழ் வழக்கிலும் வேரூன்றி நிலைத்துவிட்டது.