Tamil

தோற்றமும் வளர்ச்சியும்

சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த திரு. தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பெற்றது. முதல் முயற்சியாக ஆங்கிலத்தில் அமைந்திருப்பது போன்று பெரிய கலைக்களஞ்சியங்களை (Encyclopaedia) உருவாக்கும் திட்டம் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. இக்கழகம் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கபூர்வமான பணிகளைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றது.

avinashilingam

கலைக்களஞ்சியக் குழு

தமிழில் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்குக் கீழ்க்காணும் பல தலைப்புகளில் குழுக்கள் நியமிக்கப்பட்டன:

நிர்வாகக் குழுக்கள் 5, உறுப்பினர்கள் 74

பொருட்பட்டி அமைப்புக் குழுக்கள் 21, உறுப்பினர்கள் 132

ஆய்வுக்குழுக்கள் 27, உறுப்பினர்கள் 66

கலைச்சொற் குழு 1, உறுப்பினர்கள் 40

முதல் தொகுப்பு, அதன் பணி தொடங்கி 6 ஆண்டுகட்குப் பின் 1954 -இல், 742 பக்கங்களுடன் வெளிவந்தது. இதற்கு 207 அறிஞர்கள், அவரவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளனர். பணி தொய்வின்றித் தொடர்ந்து நடந்தது.1968-இல் 10ஆம் தொகுதி (இணைப்புத் தொகுதி) வெளியாயிற்று. இவற்றுள் 5ஆவது தொகுதியை அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது கலைக்களஞ்சிய ஆக்கப்பணிக்குப் பெருமை சேர்ப்பதாகும் .

இந்திய மொழிகளில் 10 தொகுதிகளைக் கொண்ட விரிவான கலைக்களஞ்சியம் தமிழில் தான் முதன் முதலாக வந்தது என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும். இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஓர் ஒப்பு உயர்வற்ற ஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டாகக் கருதலாம். இவற்றிற்கு 2240 அறிஞர்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். இது உண்மையிலேயே ஓர் ஒப்பும். உயர்வுமற்ற தமிழ்ப் பணியாகும்.

ஆக்கபூர்வமான, முன்னோடியான தமிழ்ப் பணி

கலைக்களஞ்சியத் தரவுகளைச் சேகரிப்பதில் திரு. ம.ப. பெரியசாமித்தூரன் அவர்கள் அறிஞர் பெருமக்கள் பலரின் உதவியுடன் முன்னின்று கடுமையாக உழைத்தார். இவ் உழைப்பின் பயனாகக் கலைக்களஞ்சியத் தொகுதிகள் பின்வருமாறு வெளிவந்தன:

periyasamy

1954-முதல் தொகுதி

1955-இரண்டாம் தொகுதி

1956-மூன்று, நான்காம் தொகுதிகள்

1958-ஐந்தாம் தொகுதி

1959-ஆறாம் தொகுதி

1960-ஏழாம் தொகுதி

1961-எட்டாம் தொகுதி

1963-ஒன்பதாம் தொகுதி

1968-பத்தாம் தொகுதி

(இணைப்புத் தொகுதி)

“கலைக்களஞ்சியம் என்னும் பொருள் பொதிந்த சொல்லைத் தமிழகத்திற்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கே உரியதாகும். இப்பொழுது “Encyclopaedia” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான புத்தாக்கச் சொல்லாகத் தமிழறிஞர் அனைவராலும் “கலைக்களஞ்சியம்” என்னும் சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல் தமிழ் வழக்கிலும் வேரூன்றி நிலைத்துவிட்டது.

தமிழ் வளர்ச்சிக் கழகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு திட்டப்பணிகளை 24/10/24 முதல் 3/2/26 வரை ஒருங்கிணைத்து வந்தார் முனைவர் வ. ஜெயதேவன். ​